Monday 21 March 2016

யார் தேசதுரோகி? - கன்னையாகுமாரா ? இந்து மகா சபாவா?

JNU மாணவர் சங்க தலைவர் கன்னையாகுமார் டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைப்பெற்ற அப்சல்குரு தூக்கு மற்றும் இந்தியாவில் தூக்குத்தண்டனைக்கு எதிரான கருத்தரங்கத்தில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராகவும் பேசினார்; என்று தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு பிணையில் வெளிவந்திருக்கும் கன்னையாகுமாருக்கு எதிராக மத்திய அரசிலிருந்து பலரும் கண்டனமும் கருத்தும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் கன்னையாகுமார்  அன்றிலிருந்து இன்று வரை நான் அப்சல் குருவை ஆதரித்தும்  இந்தியாவுக்கு எதிராகவும் பேசவில்லை. தூக்கு தண்டனை பற்றி தான் பேசினேன் என்று கூறுகிறார்.

கன்னையாகுமார் கூறுவதை உண்மை என்று நிருபிக்கும் வகையில் அவரை கைது செய்யும் போது ஆதாராமக காட்டிய காணொலி தற்போது மோசடி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வீடியோ மோசடி

அந்தக் காணொலியில் உள்ள  குரல்கள் செயற்கையாக பதிவு செய்யப்பட்டு உட்புகுத்தப்பட்டவை என்று அய்தராபாத் அதிநவீன தேசிய பரிசோதனைக் கூடம் (Central Forensic Science Laboratory)  கண்டறிந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

கன்னையா குமார் இருக்கும் காணொலியில் உள்ள உண்மையான குரல் பதிவுகள் அகற்றப்பட்டு, அதன் பிறகு தனியாக சிலரின் குரல்கள் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன. காணொலியின் பல இடங்களில் இரண்டாம் மூன்றாம் நபரின் குரல்கள் வெவ்வேறு இடங் களில் பதிவுசெய்யப்பட்டு பிறகு கன்னையாகுமாரின் காணொலியில் இணைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் அய்ந்து இடங்களில் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அவசர அவசரமாக செய்யப்பட்ட இந்த மோசடி வேலையில் பல்வேறு தவறுகள் உள்ளன. இதை மோசடி செய்தவர்கள் கவனிக்கத்தவறிவிட்டனர் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளது.

காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக் ராஜினாமா

அதற்கு முன்பாகவே காணொலி மோசடியாக மாற்றப்பட்டதை கண்டித்து காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக் தனது தலைமை எடிட்டர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜி-டிவியில் இருந்து விலகியுள்ளார்.  டில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் மோசடி நடந்துள்ளதை விளக்கியுள்ளார். 

மோசடி வீடியோ பின்னணியில் ஸ்மிருதிரானியின் தோழி

மோசடி வீடியோ பின்னணியில் ஸ்மிருதிரானியின் தோழி ஷில்பி திவாரி என்பவர் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷில்பி திவாரி  மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மிகவும் நெருக்க மானவர். அவர்தான் சமூக ஊடகங்களின் வாயிலாக திருத்தப்பட்ட காட்சிப்பதிவுகளை வெளியிட்டு பரப்பியுள்ளார். அமேதியில் நடை பெற்றமக்களவைத் தேர் தலில் ஸ்மிருதி இரானியின் தேர்தல் நிர்வாகியாக செயல்பட்டுவந்துள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ஆலோசகர் நியமனத்தில் அவருக்காக கல்வித்தகுதியும் தளர்த்தப்பட்டு  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிவரும் உண்மைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராகவும்  கன்னையாகுமாருக்கு ஆதரவாகவும் வருகிறது.

வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. கன்னையாகுமார் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்கட்டும். தவறில்லை ஆனால் பொய்யான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு மாணவனை கைது செய்து அவனை தண்டிக்க  ஆதாரத்தை தேடும் காவல்துறையும் மத்திய அரசும். இந்தியாவின் தேசபிதாவான மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய இந்து மகா சபாவினரை கைது செய்யவில்லையே ஏன்?

கருப்பு தினம்’ 

குடியரசு தினத்தை கருப்பு தினம்என்று கூறி இந்திய அரசியலமைப்புக்கு எதிராக போராடிய இந்து மகா சபாவினர்.

30 ஜனவரி 2016 அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை இனிப்பு வழங்கி மேளதாளத்துடன் கொண்டாடியுள்ளார்கள். 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் 30 ஜனவரி 2016  அன்று  குழுமிய இந்து மகா சபாவினர் இந்தி திரைப்படப் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டு, மேளதாளங்களுடன் உற்சாகமாக நடனமாடி இனிப்புகளை பரிமாரி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை கோலாகலமாகக் கொண்டாடினர்.

நாட்டின் நாயகன் நாதுராம் கோட்சே

இந்த கொண்டாட்டம் குறித்து இந்து மகா சபாவின் தேசிய துணை தலைவர் பண்டிட் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டின் நாயகன் நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்ற இந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் இனிப்புகள் வழங்கியும், காப்புகள் கட்டியும், காந்தி இறந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மக்களை அழைத்து நடனமாடச் சொல்லியும் கொண்டாடுவோம். இது எங்களுக்கு ஒரு திருவிழா என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “மதசார்பற்ற அரசியலமைப்பு என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. இந்தியா அதிகாரப்பூர்வமாக  இந்து நாடு என்று அறிவிக்கும் போது, கோட்சே இந்தியாவின் நாயகனாக அறிவிக்கப்படுவார். அப்போது, காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் தேசிய விழாவாக கொண்டாடப்படும்.என்றார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்து மகா சபாவினரின் இந்த சர்ச்சைக் கருத்தும் தேசவிரோத  நடவடிக்கையின் மீதும்  ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இவர்களை  தேசத்துரோக வழக்கில் கைது செய்யவில்லை?

இவர்கள் தான் கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் நினைவு தினத்தன்று நாடு முழுவதும் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தில் கோட்சேவின் சிலையை நிறுவப் போவதாகக் கூறி அதற்காக பூமி பூஜை நடத்தினார்கள்.

தூக்கு தண்டனையை பற்றி  பேசிய மாணவனை  தேச விரோத வழக்கில் கைது செய்து அவனை இந்திய நாட்டுக்கு எதிரி போல் சித்தரித்து  பேசும் மத்திய பாஜக அரசின் அமைச்சர்கள், ஊடகங்கள் இணையதள இளைஞர்கள். ஏன் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற தினத்தை கொண்டாடியும், நாதுராம் கோட்சேவுக்கு சிலை  நிறுவ முயற்ச்சிக்கும்   இந்து மகா சபாவினர்களை கைது செய்யவில்லை? விமர்சிக்கவில்லை? கண்டிக்கவில்லை?

ஏன் இந்த மவுனம்? மதசார்பற்ற நாட்டை மதம் சார்ந்த நாடாக மாற்ற முயற்ச்சி செய்பவர்களுக்கு தரும் ஆதரவா?

இதனால் சாதரண மக்களுக்கும் எழும் சந்தேகம் என்னவென்றால் இந்தியாவில் தேசதுரோகி என்றால் யார் ?

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி நான் நடப்பேன் என்று கூறும் கன்னயாகுமார் தேச துரோகியாஅல்லது

இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டு காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தை கொண்டாடும் இந்து மகா சபாவினர் தேச துரோகியா?

மத்திய அரசுதான் மக்களுக்கு விளக்கம் தரவேண்டும். ஆனால் தருவார்களா?
- தஅ

No comments:

Post a Comment