Wednesday 10 August 2016

சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர்கள்



திராவிடர் இயக்கமான - தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் “நீதிக்கட்சி” ((Justice Party) என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட அக்கட்சி அந்நாளில் நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டினையும், அதன் லட்சியமான சமூக நீதியையுமே முன்னிலைப்படுத்திடும் பெயர் கொண்டது.  அந்த  அமைப் பின் முழு வரலாற்றையும், அதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தமது அறிவு, உழைப்பு, அனுபவம், செல்வம் எல்லாவற்றையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் எழுச்சிக் கும், வளர்ச்சிக்கும், கொடுத்த உத்தமத் தலைவர்கள் வாழ்வையும், வரலாற்றையும், அவர்கள் போராடி நமக்குப் பெற்றுத் தந்த உரிமைகளையும் 100 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், நமது இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து உணர்வு கொள்ள வேண்டும்.
வேர்களின் வரலாறு, விழுதுகள் அறிய வேண்டும்
அந்த அரும் உழவர்கள் இந்த மண்ணை சமூகநீதிக்காக பக்குவப்படுத்திட, பெரும்பான்மையான மக்களுக்கு, வெகு சிறுபான்மையோர் மனுஸ்மிருதி, வேதங்கள் என்பவை களை மூளைக்குச் சாயமாக ஏற்றியதனால் ஏற்பட்ட தற்குறித்தனம், கல்வி உரிமை மறுப்பு - அறியாமை - வறுமை - இவைகளிலிருந்து பெரும்பான்மையினரான நம் மக்க ளைக் காப்பாற்றிட பிறந்ததே பார்ப்பனரல்லாதார் கட்சியான நீதிக்கட்சி. அதன் முன் னோடிகள் தனித்தனியே தம் முயற்சிகளை மேற்கொண்டனர். 1912 முதலே, டாக்டர் சி.நடேசன் அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க போராடிய பல்வேறு சாதனைகளும், 1916ல் சர்.பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் அவரோடு இணைந்த பல பார்ப்ப னரல்லாத தலைவர்களும் ஆற்றிய   அருந்தொண்டு களும், வரலாற்று பாடங்களாக்கி வழி வழியாக அறிந்து கொள்ள ஏனோ நாம் தவறிவிட்டோம்.
1967இல் அறிஞர் அண்ணாவைப் பார்த்து,
செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்:
1957இல் தேர்தலில் போட்டியிட்டு 1967இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியின் (திமுகவின்) தனிப்பெரும் சாதனை அல்லவா? என்று அண்ணாவிடம் கேட்க, அறிஞர் அண்ணா மிகுந்த பெருமிதத்துடனும் அதே நேரத்தில் தன்னடக்கத்துடனும் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல; எங்கள் பாட்டன் - நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது ஏற்பட்ட வெற்றி. நீதிக்கட்சி அப்போது தோல்வி அடைந்த பின், காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி அய்யர் ‘நீதிக்கட்சியை 500 அடி ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்’ என்று கூறியது உண்மை அல்ல; இதோ நாங்கள் அதன் தொடர்ச்சியாகவே இந்த வெற்றிக் கனியைப் பறித்துள்ளோம்” என்றார்.
நீதிக்கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அக்கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்கள் “அதென்ன அல்லாதார்?” 100க்கு 3 பேர்களாக உள்ளவர்களை வைத்து எஞ்சிய 97 பேர்களை அல்லா தார்கள் என்று  அடையாளப்படுத்திக் கொள்ளுதல், மிகவும் இழிவு - கேவலம் அல்லவா? நாம் 97 சதவிகிதத்தினர்  திராவிடர்கள் என்று வரலாற்றுப் பெருமை தரும் பெய ரையே வைத்துக் கொள்ளலாமே” என்று கூறிய பின்னர் திராவிடர் என்ற வரலாற்று பெருமை தரும் அடையாளமும், திராவிடரின்  மீது  ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆரியர்கள் என்ற உணர்வும் பரவ ஆரம்பித்தது.
திராவிடர் இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டடம் எழுப்பி, ஆட்சிக் கட்டிலும் அமைத்து ஒரு மாபெரும் அரசியல், சமுதாய (கல்வி, உத்தியோக) எழுச்சியை - ஏற்படுத்திய கர்த்தாக்களை நாம் மறக்கலாமா? வரலாறு நம்மை மன்னிக்குமா? என்ற உணர்வோடு அந்தத் தலை வர்களைப் பற்றி அறிந்து கொள்ள 50 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுத்த திராவிடர் இயக்க எழுத் தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர், போற்றுதலுக்கு உரியவர், தலை சிறந்த திராவிடர் இயக்க எழுத் தாளர், அதிக விளம்பரம் பெறாத - விரும்பாத ஒரு பேனா மன்னர் தோழர் கோ.குமாரசாமி  என்ற மயிலாடுதுறைக்காரர்.  இவர் மத்திய அரசின்
இரயில்வே துறையில் பணியாற்றியதால் தான்  ‘திராவிடப்பித்தன்’ என்ற பெயரில் எழுதியவர். தோழர் என்.வி.நடராசன் அந்நாளில் நடத்திய திராவிடன் வார ஏட்டில் வெளியிடச் செய்தார்.
தோழர் என்.வி.நடராசன் அவர்கள் நடத்திய வாரப் பத்திரிகை - நீதிக்கட்சியின் - துவக்கத்தில் வெளிவந்த தமிழ்நாளேடான ‘திராவிடன்’ ஏட்டினை நினைவுபடுத்தவும், இன உணர்வூட்டும் வகையிலும் அப்பெயரில் அவரால் நடத்தப்பட்டது. திராவிடன் வார ஏட்டின் மலரில் மாணவ நிலையிலே கட்டுரை எழுதிடும் வாய்ப்பை தோழர் என்.வி.என். அவர்கள் என்னை போன்ற மாணவ, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தந்துள்ளார்.
அப்படி அதில் எழுதிய வரலாறும், பிறகு தனியே  அவை நூல்களாக வரவேண்டும், திராவிடர் இயக்க முன்னோடி களின் வரலாறு இளைய தலைமுறையைச் சேரவேண்டும் என்ற சிறந்த நோக்கத்திலும் பல்வேறு நூலகர்கள், பழகிய அறிஞர்கள், நண்பர்களை எல்லாம் சந்தித்துத் தேனீ, தேனை பல பூக்களிலிருந்து திரட்டி தேன்கூடு கட்டிட உதவுவதுபோல அரும்பணியாற்றிவர் தோழர் கோ.குமாரசாமி. (1985 மயிலாடு துறையில் 22, செங்கமேட்டுத் தெருவில் குடியிருந்தார் என்பதை மட்டுமே அறிய முடிகிறது நம்மால்). அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து அவர் எழுதிய நூல். 1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் அவருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட “இராவ் சாகிப்” நல். முருகேச முதலியார் (இவர் ஓய்வு பெற்ற அதிகாரி மற்றும் நீதிக்கட்சி பிரமுகர்) அவர்களது முயற்சியால் 1984இல் டாக்டர் சி.நடேசனார் பற்றிய முழுதகவல்களைக் கொண்ட களஞ்சியமாக அவரது நூற்றாண்டு வெளியீடாக - தோழர் குமாரசாமி எழுதிய நூல் வெளிவந்தது!
இது போலவே சர்பிட்டி தியாகராயர் பற்றியும், டாக்டர் டி.எம்.நாயர் பற்றியும் தோழர் குமாரசாமி அவர்கள் பல்வேறு நூல்களிலிருந்து பல அரிய தகவல்களைத் திரட்டி தோழர் குமாரசாமி அவர்கள் “திராவிடப் பெருந்தகை தியாகராயர்” என்ற தலைப்பில் 1985இல் எழுதி அதை திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் லிமிடெட், வெளியிட்டுள்ளது (அந்நூல் மீள் பதிப்பாக நம்மால் விரைவில் வெளிக் கொணரப்பட விருக்கிறது)
இப்படி நமது தலைவர்களின் வரலாற்றை புதைபொருள் ஆராய்ச்சிபோல் தேடித்தேடி கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தினை - திராவிடர் நாகரிகத்தை எப்படி சர்ஜான்மார்ஷல் (பாதர்) ஈராஸ் பாதிரியார் போன்றவர்கள் தொல்பொருள் ஆய்வு மூலம் தந்தார்களோ, அது போல நம் குமாரசாமி நமக்கு தந்துள்ள அரிய கருவூலம் ஆகும் இது. அதிலிருந்த பலவற்றையும், வேறு பல நூல்களிலிருந்து திரட்டியவைகளையும், இன்றைய தலைமுறையினர் வர லாற்றை மறந்தவர்களாகக் கூடாது என்ற நோக்கத்துடன் தொடர் கட்டுரைகளாக எழுதிட முனைந்துள்ளோம்.
வாசகர்கள் வரவேற்றுப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறோம்.
அடுத்த இதழ் முதல் திராவிடர் கல்வித் தந்தை டாக்டர் சி.நடேசனாரின் தியாக வாழ்வின் பல்வேறு படலங்கள் தொடரும்.
தொடரும்.....
நன்றி: விடுதலை


No comments:

Post a Comment